சமஷ்டியை கோரும் உரிமை தமிழருக்கு உண்டு!

சமஷ்டி தீர்வை கோருவதற்கான உரிமை தமிழ் தரப்பினருக்கு உள்ளது. அதனை நாம் மறுக்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் கூற்றுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

அதிகார பகிர்வு இல்லாமல் இனப்பிரச்சினைக்கு தீர்வு இல்லை

இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாமல் நாட்டை சரியான திசையில் எவராலும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. எவ்வாறாயினும் அதிகாரப் பகிர்வு இல்லாமல் இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை காணவும் முடியாது.அதேபோன்று, சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வு நாட்டில் மிக அவசியமாகும் .

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் 56 கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காணாமற்போனோருக்கு முழுமையான தீர்வை வழங்க முடியாது

காணாமற் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு அண்மைக்காலமாக 500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பில் முழுமையான தீர்வை வழங்க முடியாவிட்டாலும் இதற்கு தீர்வொன்று வழங்கப்பட வேண்டும். இதில் உறுதியாக உள்ளோம்.

மேற்படி அலுவலகத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசியல் ரீதியில் நீண்ட காலமாக இரண்டாக பிளவுபட்டு செயல்பட்டுள்ளோம். இனபிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு மிக அவசியம்.

புலம்பெயர்ந்தோர் அமைப்புகள் தொடர்பில்

புலம்பெயர்ந்தோர் அமைப்புகள் தொடர்பில் எமக்கு எந்த எதிர்ப்பும் கிடையாது. எனினும் அவர்களில் ஒரு தரப்பினர் தனியான அரசு தொடர்பிலேயே பேசுகின்றனர். தேசிய பிரச்சினைக்கான தீர்வு பற்றி தெரிவிக்கும் போது சமஷ்டி தீர்வை கோருவதற்கான உரிமை தமிழ் தரப்பினருக்கு உள்ளது. அதனை நாம் மறுக்க முடியாது. இது தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பும் உள்ளது.

நாம் அதனை வழங்குகின்றோமோ இல்லையோ அதனை கோருவது அவர்களது உரிமை. இதனை வழங்குவதா? இல்லையா? என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பரென்றும் அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்