ஆபத்தான நிலையில் 18 நீர் ஆதாரங்கள்!

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக இந்நாட்டு 18 நீர் ஆதாரங்கள் தற்போது ஆபத்தான நிலையில் காணப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர்  அனோஜா களுஆராச்சி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் அத்தியாவசியமற்ற தேவைகளுக்கு நீரை பயன்படுத்த வேண்டாம் என நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மக்களிடம் மேலும் கோரியுள்ளது.

லபுகம மற்றும் கலடுவாவ நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் இன்னும் இரண்டு மாதங்களுக்குப் போதுமானது என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர்  அனோஜா களுஆராச்சி மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கண்காணிப்பு அமைப்பின் கீழ் 16 நீர் விநியோக அமைப்புகளில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பேருவளை, அளுத்கம, நிவித்திகல, நாரம்மல, கம்போலவத்தை, புஸ்ஸல்லாவ, அங்கும்புர, மீவதுர, புஸ்ஸெல்ல, ரத்தோட்டை, ஹட்டன், கொட்டகலை, ஊருபொக்க, புத்தல, சூரியஹார ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இதேவேளை, வாத்துவை, எஹெலியகொட மற்றும் ரதம்பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தற்போது குறைந்த அழுத்தத்தில் விநியோகிக்கப்படுவதால், அந்த பகுதிகளுக்கு பவுசர்கள் மூலம் நீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.