மலையகத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை!

“மலையக பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க, புதிய திட்டம் வகுக்கப்பட உள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தின் மலையக ஒன்றியத்தின் தலைவர், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

இலங்கை பாராளுமன்றத்தின், புதிதாக உருவாக்கப்பட்ட மலையக ஒன்றியத்தின், முதலாவது கூட்டம் குழு அறை 8 இல் நடைப்பெற்றது. இதன் போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோ கணேசன், சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இக் கலந்துரையாடலுக்கு கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும், கொழும்பு, கண்டி, பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள தமிழ் தேசிய பாடசாலைகளின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டு இருந்தனர்.

இம்மாவட்டங்களில் அமைந்துள்ள தமிழ் தேசிய பாடசாலைகளில் தற்போது நிலவும் ஆசிரிய பற்றாக்குறைகள் மற்றும் பௌதீக வள குறைபாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. அவற்றுக்கான தீர்வுகளை கல்வி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்தனர்.

இக்கலந்துரையாடலின் போது பொதுவாக அனைத்து பாடசாலைகளிலும் உயர்தர வகுப்பிற்கான ஆசிரிய பற்றாக்குறை வெளிப்படுத்தப்பட்டது. குறிப்பாக கணித, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் இந்த நிலைமை மிக மோசமாக உள்ளமை தெரிய வந்தது.

எனினும் அதனை நிவர்த்தி செய்ய அவசியமான துறை சார்ந்த ஆசிரியர்கள் இல்லையென்பதே தெரிய வந்தது. இச் சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு புதிய ஒரு திட்டத்தை வகுக்க வேண்டிய தேவை உள்ளதென்பது சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கமைய இந்திய அரசாங்கத்திற்கு ஆசிரிய தேவை பற்றிய திட்டம் ஒன்று தயார் செய்து முன்வைப்பதோடு அவர்களின் ஒத்துழைப்பை பெறுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலின் போது பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், மலையக மக்கள் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும், குறைந்தது முழுமையான வசதிகளை கொண்ட ஒரு தேசிய பாடசாலையாவது அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதையும், அதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டினார். அத்தோடு மலையக மக்கள் அதிகம் வாழுகின்ற நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பாடசாலை ஒன்று இல்லாமை பாரபட்சமானது என்பதையும் எடுத்து காட்டினார்.