யாழில் தாய்ப்பால் புரைக்கேறியதால் உயிரிழந்த குழந்தை!

யாழில் தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து 28 நாட்களேயான சிசு ஒன்று உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று(22) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் கொக்குவில் மேற்கைச் சேர்ந்த சசிகுமார் பிரதீபா என்ற பெண் சிசுவே உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த சிசு
உயிரிழந்த சிசுவின் தாயார் சிசுவுக்கு பாலூட்டிக் கொண்டிருந்த சமயம் சிசு மயங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து உடனடியாக மதியம் 12:30 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிசுவை கொண்டு சென்ற போது சிசு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்மரணம் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.