தமிழ் மக்கள் சரியான திசைவழி நோக்கிய பயணத்தை மேற்கொள்வது அவசியம்…!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை அடைவதற்கு மக்கள் சரியான திசைவழி நோக்கிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

அச்சுவேலியில் நேற்றையதினம்(14)  இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

நடைமுறைக்கு சாத்தியமான வழிகாட்டுதலைத்தான் நான் கடந்த காலத்திலிருந்து இன்றுவரை மக்களிடம் கூறிவந்துகொண்டிருக்கின்றேன்.

மக்கள் தெளிவான நடைமுறை சார்ந்த கருத்துக்களை கேட்டு அவர்களோடு பயணிக்கும் போதுதான் அரசியலுரிமை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வுகாண முடியும்.

\தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் தீராப் பிரச்சினைகள் தீர்வுகளை அடைவதற்கு தமிழ் மக்கள் சரியான ஒரு அரசியல் அத்திவாரத்தை அல்லது சரியான திசைவழி நோக்கிய பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மாற்றம் வரும்போதுதான் தீர்வுகளை இலகுவாக காணமுடியும்.

எமது அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வுகளை அடைய  எது சிறந்த ஆரம்பமாக இருக்கும் என்பதை நான் கடந்த 30 ஆண்டுகளாக கூறிவந்துகொண்டிருக்கின்றேன்.

ஆனால் அன்றிருந்த இயக்கங்களோ தமிழ் அரசியல் தரப்பினரோ எனது கருத்துக்களை  செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று எடுத்துக்கொண்டு உசுப்பேற்றும் அரசியல் கருத்துக்களை முன்வைத்து எமது மக்களை இடம்பெயர்வுகளுக்கும் அழிவுகளுக்கும் முகங்கொடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டார்கள்.

ஆனாலும் தற்போது அத்தகைய அரசியல் தரப்பினர் நான் 30 வருடத்துக்கு முன்பு கூறியதை தற்போது முணுமுணுக்க தொடங்கியுள்ளனர்.

அதை நான் வரவேற்றாலும் அவர்களது அந்த முணுமுணுப்பு கூட உண்மைத்தன்மையானதாக இருக்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

வாக்குகளை அபகரிப்பதற்காக தேசியம் பேசும் சுயநலவாதிகளின் நிலை அவ்வாறுதான் இருக்கும்.

அதனால் அவர்களை குறைகூறாமல் எமது மக்கள் உண்மைத் தன்மையுடன் வெளிப்படையாக தெளிவான கருத்துக்களை கூறுபவர்களின் கருத்துக்களை கேட்டு அவர்களோடு பயணிக்கும் போது பிரச்சினைகளை விரைவாகவும் இலகுவாகவும் தீர்தக்க முடியும் என நான் எனது அனுபவத்தினூடாக கூறுகின்றேன்.

இதேநேரம் அபிவிருத்தி மட்டு் தான் எனது இலக்கல்ல நான் முன்னெடுக்கும் ஒவ்வாரு அபிவிருத்தியிலும் தமிழ் மக்கள் சார்பான வலுவான ஓர் அரசியல் இருக்கின்றது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.