இராணுவ வீரர்களுக்கான பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு!

விடுமுறை நிறைவடைந்தும் நீண்ட நாட்களாக விடுமுறையின்றி கடமைக்கு சமுகமளிக்காத இராணுவ வீரர்களுக்கு இன்று சனிக்கிழமை (20) முதல் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த பொது மன்னிப்புக் காலம் எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்தக் காலப்பகுதியில் நீண்ட நாட்களாக விடுமுறையின்றி கடமைக்கு சமுகமளிக்காத இராணுவ வீரர்கள் தங்களது படைப்பிரிவு மையத்தைத் தொடர்பு கொண்டு சட்டபூர்வமாகச் சேவையை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இராணுவ அடையாள அட்டையின் பிரதி, தேசிய அடையாள அட்டை, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், வங்கி புத்தகத்தின் புகைப்பட பிரதி என்பன படைப்பிரிவு மையத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என இராணுவம் அறிவித்துள்ளது.