வெப்பநிலை 174 வருடங்களில் பதிவாகாத அளவில் அதிகரிப்பு!

கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவில் இந்த வருடத்தில் புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளது. அத்துடன் 65 ஆண்டுகளின் பின்னர் கடலின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

2027ஆம் ஆண்டுக்குள், புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக உயர்வடைவதற்கு 66% வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெப்பநிலை வேகமாக அதிகரிக்கும் பட்சத்தில் பனிப்பாறைகள் உருகுவதும் அதிகரிக்கும்.

அத்துடன் கடல் மட்டமும் வேகமாக உயரக்கூடிய அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் மே மாதம் வரையில் அதிகமான வெப்பநிலை பதிவாகும் எனவும், எல் நினோ உச்சத்தை அடைய வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அறிவித்துள்ளது.

இந்த வெப்பநிலை உயர்வு என்பது எதிர்வரும் காலங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புவிக்கு எதிராக, அதன் வளங்களை அழிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் ஒரு தனி நபரிடமிருந்து ஆரம்பிக்கப்படுவது போன்று, புவி மாசடைவதை தடுக்கும் நடவடிக்கைகளும் தனி நபரிடமிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.

மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க புவியின் வளங்கள் குறைந்து கொண்டே செல்கின்றது.

உலகில் ஒவ்வொரு நாளும் 700இற்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழப்பதாகவும், ஒரு கோடிக்கும் அதிகமான சிறுவர்கள் தீவிர மாசடைந்த பகுதிகளில் வாழ்ந்து வருவதாகவும் யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

புவியில் உள்ள வாயு, நீர் உள்ளிட்ட சகல வளங்களையும் நாம் பயன்படுத்தி வருகின்றோம். சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப எல்லையற்ற வளங்களும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில் காலநிலை மாற்றம் போன்ற காரணிகளால் புவியிலுள்ள வளங்கள் மாசடையும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

புவியின் பாதுகாப்பிற்காக மாத்திரமின்றி மனிதனின் பாதுகாப்பிற்காகவும் அன்றாட வாழ்வில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.

இந்த நிலையில், எம்மை வாழ வைக்கும் புவி ஆரோக்கியமாக இருந்தால் தான், நாம் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதைக் கருத்திற் கொண்டு, நிலம், நீர் மற்றும் காற்று மாசுபாட்டை குறைத்து, புவியைப் பாதுகாக்க உறுதியேற்க வேண்டும் என்றும் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அறிவித்துள்ளது.