காலவரையின்றி ஒத்திவைக்கப்படும் இலங்கை இந்திய கப்பல் சேவை!

இந்தியா – நாகப்பட்டினத்திலிருந்து யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக இன்று (2024.05.18) அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு குறைபாடுகள்
முன்னதாக குறித்த கப்பல் சேவையை கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், சில சட்டரீதியான அனுமதிகள் உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டதுடன் மே மாதம் 19 வரையில் அந்த செயற்பாடு பிற்போடப்பட்டநிலையில் தற்போது மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது.

பழைய கப்பல் என்பதால் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரி செய்தால் மட்டுமே உரிய அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என இந்த படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவம் அறிவித்துள்ளது.

செலுத்திய கட்டணத்தினை முழுமையாக மீளப்பெற விரும்பினால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு செலுத்திய கட்டணத்தினை மீளப்பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.