புதுக்குடியிருப்பில் டிப்பர் சாரதி மீது இராணுவ புலனாய்வாளர்கள் கொடூர தாக்குதல்…!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று (24.01.2022) அதிகாலை 3.00 மணியவில் இராணுவ புலனாய்வாளர்கள் வீதியால் சென்ற டிப்பரினை வழிமறித்து சாரதிமீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

சாரதிமீது இருப்பு கம்பியால் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கண் மற்றும் முதுகு பகுதிகளில் காயமடைந்த நிலையில் டிப்பர் சாரதி புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று அதிகாலையில் டிப்பருடன் புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் பயணித்த வேளை டிப்பரினை மறித்த சிவில் உடை தரித்த இராணுவ புலனாய்வாளர்கள் டிப்பரில் எதுவும் இல்லாத நிலையில் சாரதியினை இறக்கி இரும்பு கம்பியினால் தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

இவர் தற்போது புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புலனாய்வாளர்கள் டிப்பரில் என்ன இருக்கின்றது என்று சாரதியிடம் கேட்ட நிலையில் டிப்பரில் ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட இராணுவ புலனாய்வாளர்கள் இருவர் மதுபோதையில் நின்று தன்மீது கம்பியால் தாக்கியுள்ளார்கள் என்று பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

இதன்போது கண்ணில் காயமடைந்த நிலையில் குறித்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.