கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் இளைஞர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்….!

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் புத்தாண்டு தினத்தில் இளைஞர் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றுக் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 12ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்கக் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் புத்தாண்டு தினமான முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் குத்தி இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவத்தில் குணரட்னம் கார்த்தீபன் எனும் 24 வயதுடைய இளைஞர் படுகொலை செய்யப்பட்டதோடு மேலுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்யவில்லையெனத் தெரிவித்துக் குறித்த இளைஞனின் கொலைக்கு நீதி கோரி பரந்தன் வர்த்தகர்கள் கடந்த (03-01-2022) முழு கடையடைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

தொடர்ந்து குற்றவாளிகளைக் கைது செய்து குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துமாறு கோரி நேற்று உயிரிழந்த இளைஞனின் சடலத்தை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் வாக்குறுதியை அடுத்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

குறித்த குற்றவாளிகளைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து ஏற்கனவே ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து எதிர்வரும் 12ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதே நேரம் நேற்றுக் கைது செய்யப்பட்ட மற்றுமொரு, சந்தேக நபரைக் கிளிநொச்சி பொலிஸார் இன்று பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றில் நீதிமன்ற நீதிவான் லெனின்குமார் முன்னிலையில் முன்னிறுத்தியதையடுத்து எதிர்வரும் 12ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

தான் கடந்த மூன்று நாட்களும் 3ம் வாய்க்கால் பன்னங்கண்டியிலுள்ள தனது அன்ரியின் வீட்டில் ஒழித்து இருந்ததாகவும் இன்றையதினம் மன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.