கல்விக் கட்டணம் செலுத்த முடியாத கல்லூரி மாணவி தற்கொலை : வறுமையால் பரிதாபமாக பறிபோன உயிர்!!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கழுவன்திட்டை ஆர்.சி தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின். இவரது இரண்டாவது மகள் பிரின்சி (வயது 19). இவர் மார்தாண்டம் பகுதியில் செயல்படும் சைபர் ஸ்பாட் என்ற தனியார் டிப்ளமோ கல்லூரியில் OPTOMETRY இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இதற்காக 30 ஆயிரம் ரூபாய் கல்வி கட்டணம் செலுத்த இன்று இறுதி நாள் என்பதால் தாய் தந்தையிடம் பல நாட்கள் கேட்டும் வறுமை காரணமாகவும் மூத்த மகளை கடன் வாங்கி திருமணம் செய்து கொடுத்த நிலையில் இந்த கல்வி கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த நிலையில் காணபட்ட மாணவி இன்று வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் உடலை கைபற்றி குழித்துறை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்வி கற்க காசு இல்லாமல் வறுமையின் காரணமாக கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.