போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் அறுவர் கைது!

நாட்டில் வெவ்வேறு இடங்களில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின்போது போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனி பாலம், நவலோகபுர, சாதம்மாவத்தை ஆகிய பிரதேசங்களில் பொலிஸார் நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது ஹெரோயினுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை, சேதுவத்த, வெல்லம்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 27, 36, 40 வயதுகளையுடைய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கண்டி ஹசலக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டுமல்ல பிரதேசத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கியுடன் துங்கொல்ல பட்டுமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 39 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும், அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கராங்காவ பிரதேசத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.