யாழ். – கொடிகாமம் பகுதியில் மதுபான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் (Photos)

யாழ். – கொடிகாமம் வடக்கு பகுதியிலுள்ள மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் கள்ளுத் தவறணைக்கு நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கும், தவறணையை அகற்றுமாறும் கூறி இன்று மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த கள்ளுத் தவறனையானது ஐந்து வருடங்களுக்கு தற்காலிகமாக இயங்குமெனத் தெரிவித்து ஆரம்பித்தையடுத்து, அடுத்த 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கும் முகமாக நிரந்தர கட்டடம் ஆரம்பிக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அப்பகுதி மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டதுடன். கள்ளுத் தவறணையை அகற்றுமாறு கூறியும் உரிமையாளரிடம் வாய்த்தகராரில் ஈடுபட்டுள்ளனர்.

கள்ளுத் தவறணையில் மது அருந்திவிட்டு வரும் நபர்களால் இந்தப் பகுதியில் வசிக்க முடியாதவாறு தகாத வார்த்தைப் பிரயோகம், வீதிகளால் மாணவர்கள், பெண்கள் செல்ல முடியாதவாறு மது போதையில் உள்ளவர்களின் அடாவடிகள் என பல வகையான இன்னல்களுக்கு தாம் முகம் கொடுப்பதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டதனால் கொடிகாமம் பொலிஸார் தலையிட்டு எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுடன் பேசி அவர்களின் வாக்கு மூலத்தைப் பதிவு செய்தனர்.

மக்களின் வாக்கு மூலத்திற்கு அமைய நாளைய தினம் சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு தொடரப்படும் எனவும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மேலதிக நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் எனவும். அது வரை கட்டட நடவடிக்கைக்கு தற்காலிகமாக நிறுத்துமாறும் பொலிஸ் பொறுப்பதிகாரி எதிர்வீரசிங்க அறிவித்துள்ளதையடுத்து, மக்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேறினர்.