வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் இருவரின் தவறான முடிவு : ஒருவர் கவலைக்கிடம்!

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் இருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றிரவு அவர்கள் தற்கொலைக்கு முயன்றதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்கொலைக்கு முயன்ற மற்றையவரின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ள போதிலும் அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவர்களை இலங்கைக்கு அனுப்ப அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தாங்கள் நாடு திரும்ப தயாராக இல்லை என கூறி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

303 இலங்கைத் தமிழர்களுடன் கனடா நோக்கிச் சென்ற மீன்பிடிப் படகு மூழ்கியதை அடுத்து, பயணிகளை சிங்கப்பூர் அதிகாரிகள் மீட்டு கடந்த (08.11.2022) வியட்நாமுக்கு அழைத்துச் சென்றனர்.

மீட்கப்பட்ட இலங்கை பிரஜைகள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு தற்போது மூன்று முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எந்த சூழ்நிலையிலும் இலங்கைக்கு திரும்பப் போவதில்லை என தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் தெரிவித்துள்ளனர்.

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை வலுக்கட்டாயமாக நாடு கடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இவர்கள் இருவரும் இலங்கைக்கு திரும்ப மாட்டோம் என தெரிவித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.