போலி விசா மூலம் வெளிநாட்டிற்கு செல்ல இருந்த யாழ். யுவதிக்கு நடந்த சோகம் !

விசா இல்லாத இளைஞரை திருமணம் செய்து கொள்வதற்காக போலி விசாவில் பிரான்ஸ் சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

போலி போலந்து வீசாக்களுடன் தோஹா கட்டார் ஊடாக சட்டவிரோதமான முறையில் போலந்திற்குள் பிரவேசிக்க முயன்ற நால்வர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 23 வயது யுவதி பிரான்ஸ் இளைஞரை திருமணம் செய்ய சென்றது தெரியவந்துள்ளது.

இளம் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விசா இல்லாத பிரான்ஸ் இளைஞர், இலங்கைக்கு வர முடியாத நிலையில், போலி விசா மூலம் மணப்பெண்ணை போலந்துக்கு வரவழைத்து, பிரான்ஸ் அழைத்துச் செல்ல திட்டமிட்டது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஏனைய மூவரும் தொழில் நிமித்தம் பயணித்தவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் ராஜகிரிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் 21 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மனித கடத்தல் கும்பல் ஒன்று நால்வரிடமும் பணம் பெற்றுக்கொண்டு சட்ட வேலைக்காக போலந்துக்கு அனுப்புவதாக கூறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இந்த மோசடி நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.