தந்தையிடம் இருந்து தாயை காப்பாற்ற சென்ற மகளுக்கு நேர்ந்த சோகம்!

அக்மீமன பிரதேசத்தில் கணவரால் மனைவி மீது நடத்தப்பட்ட தாக்குதல் மகள் மீது விழுந்ததில் 14 வயது மகள் பலத்த காயங்களுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலஹந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கராப்பிட்டிய வைத்தியசாலை
சந்தேகநபரின் மனைவி கோணமுல்ல பிரதேசத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலைக்குச் சென்றுவிட்டு நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பிய போது கணவன் மோட்டார் சைக்கிளில் ஏறி வீட்டை விட்டு செல்வதற்கு தயாராக இருந்துள்ளார்.

அப்போது, ​​மகளை பயிற்சி வகுப்புக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருப்பதால், மோட்டார் சைக்கிளை எடுக்க வேண்டாம் என மனைவி கூறியுள்ளார்.

சந்தேகநபர் அருகில் இருந்த தடியை எடுத்து மனைவியை தாக்க முற்பட்ட போது, ​​மகள் தாயை காப்பாற்ற முன்வந்துள்ளார்.

சந்தேக நபர் மகளின் மார்பில் தடியால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.