மட்டக்களப்பில் நச்சு மீனை உண்ட மற்றுமோர் பெண்ணும் உயிரிழப்பு!

  மட்டக்களப்பு – மாங்காடு கிராமத்தில்  பேத்தை நச்சு மீனை உண்ட நிலையில் சிகிற்சை பெற்றுவந்த மற்றுமொரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மீனை சமைத்து உட்கொண்டத்தில் சுகயீனமுற்று வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மீனவர்கள் எச்சரிக்கை

கடந்த வியாழக்கிழமை (08) கடல் மீனினமான மாங்காடு கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய பேத்தை மீன்களை உட்கொள்ள கூடாத மீனினம் என்பதைத் அறிந்து மீனவர்கள் அதனை எடுத்து வீசியுள்ளனர்.

இந்நிலையில் அங்கு சென்ற ஒரு குடும்பத்தினர் மீனவர்கள் வீசிய மீன்களை பொறுக்கி எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது இது சமைப்பதற்கு உகந்த மீன் இல்லை அதனை எடுக்க வேண்டாம், என மீனவர்கள் எச்சரித்தையும் பொருட்படுத்தாத அவர்கள் பேத்தை மீனை சமைத்து உண்டுள்ளனர்.

இதனையடுத்து அன்றைய தினம் மாலை மீனை உண்ட 4 பேரும் திடீர் சுகயீனமுற்ற நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 27 வயதுடைய குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்து விட்டார். எனினும் மேலும் மூவர் அதே வைத்தியிசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ஞாயிற்றுககிழமை (11) இரவு இவ்வாறு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய யூலியாமலர் எனும் பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருவர் உயிரிழப்பு

உயிரிழந்தவரின் சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி பகுதி பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் அவர்கள் உட்கொண்ட உணவு மாதிரிகளை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன் களுவாஞ்சிகுடி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேசமயம் மீனை உண்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதுடைய பெண்ணும், மற்றும் மூன்றரை வயதுடைய ஆண் பிள்ளையும் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ள நிலையில் பெண்கள் இருவரின் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.