வவுனியா கோர விபத்தில் தாயும் மகளும் சம்ப இடத்தில் உயிரிழப்பு!

வவுனியா கண்ணாட்டி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (16)  டிப்பர் வாகனம் ஒன்று மோதி தாயும் மகளும் உயிரிழந்துள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்றைய தினம் காலை 7 மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக  குறித்த தாயும் மகளும் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காக காத்திருந்தனர்.

இதன்போது, வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாக பயணித்த டிப்பர் வாகனம் வீதியை விட்டு இறங்கி கரையில் நின்ற அவர்கள் மீது மோதியது.

விபத்தில் தாயும், மகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மற்றொரு சிறுவன் டிப்பர் வாகனத்தை கண்டதும் ஓடிச்சென்று விபத்தை தவிர்த்துக்கொண்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். 

சம்பவத்தில் அதேபகுதியைச் சேர்ந்த சிவலோகநாதன் சுபோகினி வயது 36, டினுசிகா வயது 6 என்ற இருவரே உயிரிழந்தனர்.

இதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழல் ஏற்பட்டிருந்ததுடன் மன்னார் வீதியுடனான, போக்குவரத்தும் சிலமணிநேரங்கள் பாதிக்கப்பட்டிருந்தது. 

சம்பவஇடத்திற்கு சென்ற பொலிசார் நிலமையை கட்டுப்படுத்தியதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை பறையநாலங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.