மின் துண்டிப்பை மேற்கொள்ள சென்ற அதிகாரியை மிரட்டிய இராணுவ சிப்பாய்!

திவுலப்பிட்டியவில் மின்சார கட்டணம் செலுத்தப்படாத வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற அதிகாரியை இராணுவத்தின் லெப்டினன்ட் கேணல் தர அதிகாரி ஒருவர் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த இராணுவ லெப்டினன்ட் கேணல் தர அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் பனல்வ சிறிலங்கா இராணுவ பீரங்கி படை முகாமில் கடமையாற்றும் லெப்டினன்ட் கேணல் ஆவார்.

திவுலப்பிட்டியில் உள்ள வீட்டில் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாத காரணத்தால் திவுலப்பிட்டி மின் பொறியியல் அலுவலக அதிகாரிகள் மின்சாரத்தை துண்டிக்கச் சென்றுள்ளனர்.

குறித்த குழுவினர் மின்சாரத்தை துண்டிக்க ஆயத்தமான போது வீட்டின் உரிமையாளர் என கூறப்படும் லெப்டினன்ட் கேணல் மின்சார சபை ஊழியர்களை அச்சுறுத்தி உள்ளார்.

இதையடுத்து குறித்த லெப்டினன்ட் கேணல் திவுலப்பிட்டி பொலிஸ் நிலையத்தினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.