யாழில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கிறங்கி போராடும் மக்கள்

யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுவருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வகையில் பிரதேச மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று சனிக்கிழமை (01) காலை 9.00 மணி முதல் தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கப்பட்டு வரும் காணியின் வாயிலில் மேற்கொள்ளப்பட்டது.

மக்களுக்கு மனநோய் வேண்டாம்

“மக்களுக்கு மனநோய் வேண்டாம்”, “மின்காந்த அலை, காற்றுக்கு நஞ்சு”, “மக்களை உடல், உள ரீதியாகப் பாதிப்புக்கு உள்ளாக்காதீர்கள்”, “எங்கோ போகும் இடி மின்னலை எம்மை நோக்கி இழுக்க வேண்டாம்”, “நகர்த்து நகர்த்து தொடர்பாடல் கோபுரத்தை நகர்த்து” போன்ற சுலோகங்கள் அடங்கிய பாதாதைகளைத் தாங்கியும், கோசங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு  நெருக்கமாகக் குடிமனைகளில் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் நோயாளர்களும் காணப்படுவதனால், பொது மக்களுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் தொலைத் தொடர்புக் கோபுரத்தை இடமாற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு முறைப்பாடு செய்த போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.

அதன் காரணமாகவே தாம் வீத்திக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவதாகவும்  அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.   இந்த போராட்டத்தில்  பெண்கள், குழந்தைகள் உட்படப் பெருமளவானோர்  கலந்து கொண்டனர்.       

அதேவேளை போராட்டம் குறித்துத் தகவலறிந்த பொலிஸார் அந்தப் பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது.