பாடசாலையில் மாணவர்களை சேர்ப்பதற்கு போலி ஆவணங்கள் தயாரித்த கிராம அதிகாரி கைது!

  கண்டி  பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் மாணவிகளைச் சேர்ப்பதற்காக போலியான சான்றிதழை தயாரித்த குற்றச்சாட்டில் கிராம அதிகாரி ஒருவர்  கண்டி விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.

வரெல்லாகம பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய கிராம அதிகாரி ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 பிள்ளைகளுக்கு போலி ஆவணங்கள்

சந்தேகநபர் தனது பெயரையும் கல்வி அமைச்சின் கடிதத் தலைப்பையும் பயன்படுத்தி போலியான ஆவணங்களைத் தயாரித்து வழங்கியுள்ளாr.

அதன் மூலம் 29 பிள்ளைகள் இப்பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த பிரேமதிலக முன்னர் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம், விரிவான விசாரணையில் தெரியவந்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் கிராம அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைதான சந்தேகநபர் தொடர்பில் கண்டி விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.