விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த இந்தியர் கைது!

இலங்கையில்  விசா இன்றி இரண்டு வருடங்களாக வாழ்ந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நபரொருவரை மட்டக்களப்பு நகரில் வைத்து சந்தேகத்தின் பேரில் இன்று சனிக்கிழமை (15) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் சத்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் குறித்த நபர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழில் வசித்து வந்த நபர்

குறித்த நபர் இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து, விசா இன்றி கடந்த 2 வருடங்களாக இலங்கையில் தங்கியிருப்பது தொடர்பில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லப்பன் செல்வதுரை என்ற அந்த நபர் கடந்த 2021ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்தது முதல் இதுவரை யாழ்ப்பாணம் கைலாச பிள்ளையார் கோவில் பகுதியிலேயே தங்கியிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதான நபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.