வீட்டில் தோட்டாக்களை மறைத்து வைத்த இராணுவ வீரர் கைது!

வெலிசறை பகுதியில் உள்ள வீட்டில் தோட்டாக்கள், கைக்குண்டுகள் மற்றும் இராணுவ சீருடைகளை மறைத்து வைத்திருந்ததாக கூறப்படும் முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வியாழக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரரிடம் இருந்து  4380 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 5620 கிராம் கொக்கெய்ன் ஆகிய போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 34 வயதான முன்னாள் இராணுவ கப்டன் ஆவார்.

285 9 மி.மீ. தோட்டாக்கள், 16 16 மி.மீ. தோட்டாக்கள், இரண்டு ரி-56 தோட்டாக்கள், நான்கு கைக்குண்டுகள்  மற்றும் 6 இராணுவ சீருடைகள் மற்றும் மூன்று இராணுவ டீ-சர்ட்டுகள் ஆகியவற்றை முன்னாள் இராணுவ வீரரின் வீட்டை சோதனையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை சோதனையிட்ட போது மேற்குறிப்பிட்ட பொருட்களை மீட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான முன்னாள் இராணுவ வீரர்  மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.