யாழில் மது போதையில் அட்டகாசம் செய்த அரச பணியாளர்

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் அரை நிர்வாணமாக மது போதையில் நின்ற அரச பணியாளரொருவர் பொது இடத்தில் அரச ஊழியரொருவரை கொட்டனினால் தாக்கி அட்டகாசம் புரிந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

ஊர்காவற்துறையில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த பாதையில் நேற்று (25) பிற்பகல் 4.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, கடல் பாதையில் கடமை நேரத்தில் நிறை போதையில் நின்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) பாதை பணியாளர் ஒருவர் அரை நிர்வாணமாக மது போதையில் நின்று பயணத்தில் இருந்த அரச ஊழியர்கள் பொதுமக்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் அரச ஊழியர்களுடன் தகாத வார்த்தைகளால் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் கொட்டனினால் ஊழியரை தாக்கியுள்ளார்.

இதன்போது பிரதேச செயலகம் மற்றும் நீதிமன்றங்களில் பணியாற்றும் பெண்கள் உட்பட பலரும் பாதையில் பயணத்தில் ஈடுபட்ட போது குறித்த சம்பவம் இடம்பெற்றமை பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயணிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் மது போதையில் இருந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை அரச பணியாளர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.