மன்னார் மருத மடு திருத்தலத்தில் தங்கியிருக்கும் பக்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!

மன்னார் மருத மடு திருத்தலத்தில் தங்கியிருக்கும் பக்தர்களுக்கு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

மடு மாதா திருத்தலச் சூழலில் பெருமளவில் பக்தர்கள் தங்கியிருக்கும் சூழ்நிலையில் இடையிடையே மழை பெய்து வருகிறது.

இதனால், தமது வாழ்விடங்களில் வசிக்க முடியாது பல்வேறுபட்ட விஷமுடைய உயிரிழங்கள் வெளியேறி வரும் நிலையில் அவற்றால் பக்தர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

இவ்வாறான நிலையில் ஆலயச் சூழலில் தங்கியுள்ள பக்தர்கள் இது தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு அன்புடன் வேண்டப்படுகின்றனர்.

ஏதாவது தெரியாத அல்லது அடையாளம் காணப்பட்ட விஷமுடைய உயிரிழங்களால் கடி உண்டவர்கள் உடனடியாக மடு தேவாலயத்தில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என அவர் தெரிவித்தார்.

மேலும், மன்னார் மருத மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (15-08-2023) இடம்பெறவுள்ள நிலையில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான மக்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தந்து தற்காலிக கூடாரங்களை அமைத்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.