நாட்டின் வைத்தியசாலைகள் ஆபத்தான நிலையில்!

நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் பற்றாக்குறை காரணமாக CT, MRI, PET பரிசோதனைகள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, காலி, பதுளை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பாரிய அபாய நிலை காணப்படுவதாக அதன் பொதுச் செயலாளர்  தர்மகீர்த்தி ஏப்பா குறிப்பிட்டுள்ளார்.

“நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் தற்போது கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. குறிப்பாக CT, MRI, PET போன்ற அதிகாரிகளின் ஓய்வு காரணமாக இந்த சோதனைகள் எதிர்காலத்தில் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. அத்துடன் இரத்தினபுரி, காலி, பதுளை, தேசிய வைத்தியசாலையிலும் CT, MRI, PET போன்ற பரிசோதனைகள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது., அதிகாரிகளின் பணி ஓய்வு, மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்வதால் எதிர்காலத்தில் கதிரியக்க சேவை கடும் நெருக்கடியை சந்திக்கும். இதற்கான விரைவு நடவடிக்கையாக, ஆட்சேர்ப்பு மற்றும் ஓய்வு வயதை, 60 இல் இருந்து 63 வயது வரை தற்காலிகம் ஏனும் அதிகரிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.” என்றார்.