பொதுஜன பெரமுனவை பிளவுபடுத்தினால் அரசாங்கம் பலவீனமடையும் – ரோஹித அபேகுணவர்தன

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிளவுப்படுத்த ஜனாதிபதி முயற்சித்தால் அது அரசாங்கத்துக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

பொதுஜன பெரமுனவுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினரை ஒன்றிணைத்து புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் அரசியல் காய் நகர்த்தல் ஒன்று இடம்பெறுவதை நன்கு அறிவோம்.

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினருக்கும், பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் புதிய அரசியல் கூட்டணி அமைப்பதால் எமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

பொதுஜன பெரமுனவுக்கு எதிராக கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ,உதய கம்மன்பில ஆகியோரை உள்ளடக்கி ஹெலிகொப்டர் சின்னத்தில் உருவாக்கப்பட்ட புதிய கூட்டணி காலவோட்டத்தில் காணாமலாக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிளவுப்படுத்த ஜனாதிபதி முயற்சித்தால் அது அரசாங்கத்துக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

பொதுஜன பெரமுனவின் 134 உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் தான் இன்றும் செயற்படுகிறார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்களே தெரிவு செய்தோம். ஆகவே அவர் பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அரச நிர்வாகத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள ஆளுங்கட்சி உறுப்பினர் கூட்டத்தின் போது இவ்விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்  என்றார்.