தர்ப்பூசணியில் யானைக்கு விஷம் கலந்து கொடுத்த நபர் கைது!

கதிர்காமம் – அபிநவராம விகாரையைச் சேர்ந்த ‘அசேல’ என்ற யானைக்கு விஷ இரசாயனப் பொருள் அடங்கிய தர்பூசணியை ஒருவர் வழங்கியுள்ளார்.

இதுத்தொடர்பில் யானைப் பண்ணையாளர் துஷார பிரியதர்ஷன பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து குறித்த சந்தேக நபர் இன்று (20.08.2023) கைது செய்யப்பட்டதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தர்பூசணியை யானையிடம் கொடுக்க, அதனை தரையில் யானை கக்கிவிட்டது.

யானையின் வாயில் இருந்து எச்சில் வடிந்ததால், அப்பகுதிக்கு பொறுப்பான கால்நடை வைத்திய அதிகாரி ஆனந்த தர்ம கீர்த்தியை அழைத்து பரிசோதித்த போதே, விஷம் கலந்த தர்பூசணி கொடுக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

முன்னதாக யானைக்கு பொறுப்பாக இருந்த யானை பாதுகாவலர் சில முறைகேடுகள் காரணமாக நீக்கப்பட்டதாகவும், விஷம் கலந்த தர்பூசணியை யானைக்கு வழங்குமாறு அந்த நபர் வழங்கிய ஆலோசனைக்கு அமையவே இவ்வாறு மேற்கொள்ளப்பட்டதாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.

இதனைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.