வரட்சியான காலநிலையால் உயிரிழக்கும் விலங்குகள்

   நாட்டில் தற்போது நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீரைத் தேடிச் செல்லும் விலங்கினங்கள் பரிதாபமாக விபத்தில் சிக்குண்டு உயிரிழப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – மண்மனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கால்நடைகள் உன்னிச்சை – மட்டக்களப்பு பிரதான வீதி ஊடாக தினசரி குடிநீருக்காகவும் உணவுக்காகவும், அலைந்து திரிகின்றன.

விபத்தி சிக்கும் உயிரினங்கள்

இந்நிலையில், செவ்வாய்கிழமை (22) உன்னிச்சை பிரதான வீதியில் அரிய வகை மர அணில் ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.

இந்நிலையில் கால்நடைகளுக்கு வேண்டிய குடிநீரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்க உடன் முன்வர வேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அதேசமயம் கடும் வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் மாத்திரம் 1,800 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளில் ஒன்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

வாகரை வடக்கு, மண்முனை மேற்கு, வெல்லாவெளி, மண்முனை தென்மேற்கு, உள்ளிட்ட பிரதேச செயலக பிரிவுகளில் அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, மாவட்டத்தின் படுவாங்கரை பகுதியில் மேற்கொண்டுள்ள தங்களது விவசாயச் செய்கை, மேட்டுநிலப் பயிர்ச்செய்கை உள்ளிட்ட வாழ்வாதார தொழில்களும் வரட்சியினால் பெரிதும், பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.