விகாரை அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் முன்னெடுப்பு!

பொலிஸாரின் தடுப்பினையும் மீறி திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.


தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று காலை மட்டக்களப்பு நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்குளம் பகுதியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்னம்பலம் கஜேந்திரகுமார், செ.கஜேந்திரன் மற்றும் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள், பொதுமக்கள என பெருமளவானோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.


தமிழர் பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் அத்துமீறிய செயற்பாடுகளை நிறுத்துமாறும் பெரியகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் சட்ட விரோத விகாரையினை நிறுத்துமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.


தமிழர்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிக்கும் நோக்கத்தோடும் இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையிலும் இலங்கை தொல்லியல் திணைக்களமும் அரசாங்கமும் இணைந்து திருகோணமலை பெரியகுளம் சந்தியில் விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.


இந்த போராட்டம் நடாத்துவதை தடை செய்யும் வகையில் நிலாவெளி பொலிஸார் திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் ஊடாக கட்டளையினைப் பெற்றிருந்த போதிலும் அதனையும் மீறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இதன்போது நீதிமன்ற கட்டளையினை நிலாவெளி பொலிஸார் வாசித்த போதிலும் தங்களுக்கு சிங்களம் தெரியாது என போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் சிங்களத்தினால் நீதிமன்ற கட்டளை சட்டம் வாசிக்கப்பட்டு போராட்டத்தினை நிறுத்துமாறு பொலிஸாரினால் கோரப்பட்டது.