யாழ் மது விருந்தில் கைகலப்பு நபர் ஒருவர் உயிரிழப்பு!

  யாழில் இடம்பெற்ற மதுவிருந்தில் ஏற்பட்ட கைகலப்பில் கிளிநொச்சி இளைஞர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கிளிநொச்சி உழவனூரை சேர்ந்த செல்வக்குமார் ஜெகதீஷ்குமார் (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 31ஆம் திகதி எழுதுமட்டுவாழ் பகுதியில் உறவினர் வீடொன்றில் நடைபெற்ற நிகழ்வுக்கு, கிளிநொச்சியில் இருந்து மூவர் வருகை தந்திருந்த நிலையில், குறித்த நிகழ்வை தொடர்ந்து இடம்பெற்ற மது விருந்தில் கலந்து கொண்டனர்.

போதையில் வாய்த்தர்க்கம்

எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் கிளிநொச்சியில் இருந்து வருகை தந்தவர்களுக்கும் இடையில் போதையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைக்கலப்பாக மாறியுள்ளது.

அதன்போது , ஜெகதீஸ்குமாரை கட்டி வைத்தும் தாக்கியபின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை சமரசப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , இருவரை கைது செய்துள்ளனர்.