மட்டக்களப்பில் மின்சார மீட்டரில் மோசடி ; வீட்டு உரிமையாளர்கள் இருவர் கைது

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியில் மின்சார அளவீடான மீட்டரில் மோசடி செய்த வீட்டு உரிமையாளர்கள் இருவரை நேற்று வெள்ளிக்கிழமை (22) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் இரு வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த மின்சார மீட்டரில் சட்டவிரோதமாக மோசடி செய்து மின்சாரத்தை பெற்றுவந்துள்ளமை மின்சார சபையினரால் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, கொழும்பில் இருந்து வருகை தந்த உத்தியோகத்தர்கள் பொலிஸாருடன் குறித்த இரு வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது, மின்சார மீட்டரை சோதனையிட்டபோது அதில் இருந்து திருட்டுத்தனமாக மின்சாரத்தை பெற்றுள்ளதை கண்டுபிடித்ததையடுத்து, அந்த இரு வீட்டின் உரிமையாளர்களையும்  கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.