முச்சக்கரவண்டியில் தவறவிட்ட பணத்தை மீள ஒப்படைத்த சாரதி!

பெண்ணொருவர் முச்சக்கர வண்டியில் பயணம்செய்தபோது தவறுதலாக விட்டுச் சென்ற 53 ஆயிரம் ரூபா பணத்துடன் கூடிய பணப்பையை முச்சக்கர வண்டியின் சாரதி மீண்டும் அந்த பெண்ணிடம் ஒப்படைந்த சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை பாணந்துறை பிரதேசத்தில் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

 பணம் மற்றும்  பெறுமதியான ஆவணங்கள்

பாணந்துறை வேகட கவிராஜ மாவத்தையில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த பெண்ணொருவர் தவறுதலாக தனது பணப்பையை வண்டியில் விட்டுச் சென்றுள்ளார்.

முச்சக்கர வண்டியில் பணப்பை இருந்ததை அவதானித்த சாரதி அதனை எடுத்துசென்று உரியவரிடம் ஒப்படைத்துள்ளார். பெண்ணின் வீட்டுக்கு சென்ற சாரதி அதனை பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார்.

பணப்பையில் 53 ஆயிரம் ரூபா பணம் மற்றும் பெண்ணுக்கு சொந்தமான பெறுமதியான ஆவணங்கள் இருந்துள்ளன.

வீட்டை புனரமைப்பதற்காக பொருட்களை கொள்வனவு செய்ய கடைக்கு சென்ற போதே குறித்த பெண் பணப்பையை முச்சக்கர வண்டியில் தவறவிட்டுள்ளார்.

 அதேவேளை முச்சக்கர வண்டி சாரதியும், பணத்தை வண்டியில் விட்டுச்சென்ற பெண்ணும் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.