ஆட்களில்லா வீடுகளில் அரங்கேறும் கொடூரம்

அம்பாறை – கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக பகுதி முழு அளவில் பாதிக்கப்பட்ட வீடுகளில் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

வீடுகளில் உள்ள அறைகளில் அரைகுறையாக ஆண்கள், பெண்களின் உள்ளாடைகள் என்பன சிதறி காணப்படுகின்றன.

சமூக சீரழிவுகள்
வெளியிடங்களில் இருந்து வருகின்ற சிலரின் சட்டவிரோத செயற்பாடுகள் போதைப்பொருள் பாவனை பாலியல் செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருபதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது

குறித்த பகுதியில் இயங்கி வருகின்ற காதி நீதிமன்றத்தை சுற்றி காணப்படுகின்ற வீடுகள் யாவும் கைவிடப்பட்டு சுமார் 19 வருடங்களாக காடாக காணப்படுகின்றது.

போதைப்பொருள் நுகர்ந்த இடமாகவும் அந்த வீடுகளில் அடையாளங்கள் தென்படுகின்றன. அத்துடன் விச ஜந்துக்கள், விசப்பாம்புகளின் வாழிடங்களாகவும் இவ்வீடுகள் காணப்படுவதுடன் எவ்வித பாதுகாப்பற்ற இடமாகவும் விளங்குகின்றது.

இவ்வாறான கைவிடப்பட்ட வீடுகள் உரிய பராமரிப்புக்கள் இன்மையினால் அதன் அருகில் வாழும் மக்கள் கூட அச்சுறுத்தலினால் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

எனவே இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.