வாழைப்பழத்தினுள் கடத்தப்பட்ட போதைப்பொருள்!

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு கொண்டு வரப்பட்ட வாழைப்பழ சீப்பில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (29) மாலை 03.15 மணியளவில் களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களை பார்வையிட வந்த நபர் ஒருவர் சந்தேக நபர்களுக்கு வழங்குவதற்காக உணவை எடுத்து வந்துள்ளார்.

அதில் சந்தேகநபர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட வாழைப்பழங்களில் 03 மற்றும் 04 அங்குலங்கள் கொண்ட 16 உரிஞ்சு (ஸ்ட்ரோ) குழாய்களுக்குள் இந்த ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை கொண்டு வந்த நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் களுத்துறை சிறைச்சாலையால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.