பஸ்ஸிலிருந்து வெளியே வீசப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கதுருவெலயிலிருந்து மெதிரிகிரிய நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் கீழே தூக்கி வீசப்பட்டதில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பஸ் கிரித்தல குளத்துக்கு அருகில் உள்ள வளைவில் சென்றுகொண்டிருந்தபோதே அவர்  தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில்  பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என  மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.

மின்னேரிய பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்வர்ணலதா என்ற 59 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தையடுத்து பஸ் சாரதி மின்னேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.