பணியிடை நீக்கம் செய்ய வேண்டாம் என அழுத சமுர்த்தி அதிகாரி!

அக்குரஸ்ஸ சமுர்த்தி வங்கியில் வைப்பிலிட்ட பணத்தை மீளப்பெறச் சென்ற பெண் ஒருவரை சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் தொடர்பில் மனித உரிமை அமைப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த சமுர்த்தி வங்கி முகாமையாளரையும் மற்றுமொரு உத்தியோகத்தரையும் பணி இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் பிரதேச செயலாளர் எழுத்து மூலம் தமக்கு அறிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக சம்பந்தப்பட்ட மனித உரிமை அமைப்பின் அதிகாரிகள் குழு ஒன்று சமுர்த்தி வங்கி அதிகாரியை சந்திக்கச் சென்றிருந்தமை சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியில் இடம்பெற்றுள்ளது.

பணி இடைநீக்கத்தால் மிகவும் உதவியற்ற நிலையில் இருப்பதாகவும், கூலி வேலை கிடைக்காமல் இருப்பதாகவும் அதிகாரிகளிடம் குறித்த சமூர்த்தி அதிகாரிகள் கூறி அழுதுள்ளனர்.