முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்படவில்லை இராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி டி.சரவணராஜாவுக்கு  சட்டமா அதிபர் அச்சுறுத்தல் விடுத்ததாக வெளியாகிய செய்திகள் அடிப்படையற்றவை.

எவ்வித அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை என்பதை நீதியமைச்சர் என்ற வகையில் பொறுப்புடன் குறிப்பிடுகிறேன். நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல் இருக்கவில்லை என நீதிச்சேவை ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

நீதிபதியின் பதவி விலகல் கடிதம் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நீதிச்சேவை ஆணைக்குழு உரிய தீர்மானத்தை எடுக்கும், நாங்கள் தலையிட போவதில்லை என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) இடம்பெற்ற நீதித்துறைச் சட்டத்தின்  கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி டி.சரவணராஜா 2023.09.23 ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அதனூடாக தனது பதவி விலகலை அறிவுறுத்தியுள்ளார்.’உயிரச்சுறுத்தல் மற்றும் மன உளைச்சல் காரணமாக தான் பதவி விலகுவதாக ‘நீதிபதி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 நீதிபதிகளுக்கு மன உளைச்சல் இருப்பது இயல்பானதே,மன உளைச்சலால் பதவி விலகுவதாக இருந்தால் சகல நீதிபதிகளும் பதவி விலக நேரிடும்.

நீதிபதிகளுக்கு மாத்திரமல்ல சட்டத்தரணிகளுக்கும் மன உளைச்சல் உள்ளன.எமக்கும் மன உளைச்சல் உள்ளது. அக்கிராசனத்தில் அமர்ந்துள்ள சபாநாயகருக்கும் மன உளைச்சல் உள்ளது.அவ்வாறாயின் அவரும் பதவி விலக வேண்டும்.

உயிரச்சுறுத்தல் காரணமாக பதவி விலகுவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். தனக்கு உயிரச்சுறுத்தல் காணப்படுமாயின் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் நீதிபதிக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

உயிரச்சுறுத்தல் விடுத்த நபருக்கு எதிராக பிடியாணை பிறக்கிக்கலாம், பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கலாம். அந்த அதிகாரம் எமக்கு கூட இல்லை.ஆனால் அவர் எந்த அதிகாரத்தையும் பயன்படுத்தவில்லை, செயற்படவுமில்லை.

நீதிபதி டி.சரவணராஜா பதவி விலகல் தொடர்பான கடிதத்தை 2023.09.23 ஆம் திகதி எழுதியுள்ளார். ஆனால் கடிதத்தை 2023.09.27 ஆம்  திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இடைப்பட்ட காலத்தில் அவர் கொழும்பில் தங்கியுள்ளார்,இரண்டு வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்துள்ளார். தனது மோட்டார் வாகனத்தை விற்பனை செய்துள்ளார். அத்துடன், வெளிநாட்டு பயணத்துக்கான விமானச்சீட்டை  அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட  தொலைபேசி ஊடாக பதிவு செய்துள்ளார்.ஆகவே இவ்விடயங்கள் தொடர்பில் பல சந்தேகங்கள் காணப்படுகின்றன.

 நீதிபதியின் பதவி விலகல் மற்றும் அதற்கு அவர் குறிப்பிட்ட காரணிகள் தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழு உரிய விசாரணைகளை மேற்கொண்டது.

நீதிச்சேவை ஆணைக்குழுவின் அதிகாரிகள் முல்லைத்தீவுக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு எனக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள். நீதிச்சேவை ஆணைக்குழு மூன்று விடயங்களை அறிவுறுத்தியுள்ளது.

 முதலாவதாக ‘ டி.சரவணராஜா 2023.09.23 ஆம் திகதி என்று  பதிப்பிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய உயிரச்சுறுத்தல்  அல்லது மன உளைச்சல் தொடர்பில் அவர் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கோ, ஆணைக்குழுவின் செயலாளருக்கோ, நீதிச்சேவை ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கோ அல்லது தன்னுடன் இணக்கமாக செயற்பட்ட தரப்பினருக்கோ,எவ்விதத்திலும் அறிவுறுத்தவில்லை.’

இரண்டாவதாக ‘ நீதிபதி டி.சரவணராஜாவை பிரதிவாதியாக்கி பெயர் குறிப்பிட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விவகாரம் தொடர்பில் நீதிபதி டி.சரவணராஜா 2023.09.23 மற்றும் அதனை அண்மித்த காலப்பகுதியில் நீதிச்சேவை ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டிருந்தார்.அவ்வேளையில் அவர் தனக்கு உயிரச்சுறுத்தல் மற்றும் மன உளைச்சல் இருப்பதாக குறிப்பிடவில்லை.

 நீதிபதி சரவணராஜாவை சட்டமா அதிபர் அழைத்து வழக்கு தீர்ப்பை மாற்றியமைக்குமாறு குறிப்பிட்டதாக ஒரு சில ஊடகங்களில் செய்கிகள் வெளியாகின.இதனை முழுமையாக நிராகரிக்கிறோம்.இந்த நீதிபதியை தனது காரியாலயத்துக்கு அழைப்பதற்கு சட்டமாதிபருக்கு எவ்வித அவசியமும் காணப்படவில்லை. வருகை தருமாறு சட்டமா அதிபர் நீதிபதிக்கு அழைப்பு விடுக்கவில்லை.

நீதிபதி டி.சரவணராஜா வழங்கிய கட்டளைகளுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்குகளில் நீதிபதியின் பெயர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து  சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளார்.

வழக்கில் தனக்காக முன்னிலையாகுமாறு நீதிபதி சரவணராஜா சட்டமாதிபரிடம் வலியுறுத்தியுள்ளார். அதற்கு சட்டமா அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளார். இதை தவிர சட்டமா அதிபருக்கும்,நீதிபதிக்கும் எவ்வித பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை. சட்டமா அதிபர் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

 மூன்றாவதாக ‘நீதிபதி  டி. சரவணராஜா  2023.08.29 ஆம் திகதி  நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் 2023.09.23 ஆம் திகதி முதல் 2023.10.01 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியாவில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்கு செல்ல வேண்டும் ஆகவே தனக்கு வெளிநாட்டு விடுமுறை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.அதற்கமை நீதிச்சேவை ஆணைக்குழு 2023.09.25 ஆம் திகதி முதல் 2023.10.01 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் விடுமுறை வழங்கியுள்ளது.

நீதிபதியின் பதவி விலகலை தொடர்ந்து நாட்டில் நீதித்துறை இல்லாமல் போய்விட்டது என்று பலர் குறிப்பிடுவது கவலைக்குரியது. இந்த நீதிபதி தொடர்பில் அவரது மனைவி நீதிச்சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார். நீதிச்சேவை ஆணைக்குழு அந்த முறைப்பாடு தொடர்பில் ஆராய்ந்து நீதிபதியிடம் ஒருசில விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளது. அவரது தனிப்பட்ட விடயங்களை நாங்கள் ஆராயவில்லை.

நீதிபதி டி.சரவணராஜாவின் பதவி விலகல் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை. உரிய தீர்மானத்தை ஆணைக்குழு எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்விடயத்தில் எங்களுக்கு அதிகாரமில்லை,தலையிட போவதுமில்லை என்றார்.