முக்கிய வழக்கில் இருந்து நாமல் விடுதலை!

கவர்ஸ் கோர்ப்பரேட் நிறுவன சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 5 பிரதிவாதிகளும் சாட்சி விசாரணையின்றி முழுமையாக விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முறைப்பாட்டு தரப்பு வழங்கிய சாட்சியங்கள் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும், அவற்றில் நம்பிக்கை இல்லை எனவும் அறிவித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

அத்துடன், தற்போது நீதிமன்றத்தை தவிர்த்து வரும் வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான  பிரபாத் கருணாஜீவவுக்கும், நான்காம் பிரதிவாதிக்கும் விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை உடனடியாக நீக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் பிரபாத் கருணாஜீவவை கைது செய்யுமாறு விடுக்கப்பட்ட திறந்த பிடியாணையை மீளப்பெறுமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது முறைகேடாக ஈட்டிய 30 மில்லியன் ரூபா பணத்தை கவர்ஸ் கோர்ப்பரேட் நிறுவனத்தில் பயன்படுத்தியமை ஊடாக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாக கூறி நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.