பேருந்துகளில் கமெரா பொருத்த தீர்மானம்!

 பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெராக்கள் பொருத்துவதை கட்டாயமாக்க நடாளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

அதிகாரிகளுக்கு பணிப்புரை

பயணிகள் பேரூந்துகளுக்கான வீதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை கட்டாயமாக்குமாறும் எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாலக பண்டார கொட்டேகொட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்போது பயணிகள் பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெராக்கள் பொருத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துமாறும் அதன்படி பேருந்துகளில் சி.சி.டி.வி. கமெராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்குமாறும் கூட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் உத்தரவிட்டார்.

அதேவேளை தற்போது நாட்டில் உள்ள பெரும்பாலான அதிவேக நெடுஞ்சாலைகள் நஷ்டத்தில் இயங்குவதாகவும், இலாபம் ஈட்டும் அதிவேக நெடுஞ்சாலைகளின் இலாபத்தில் தான், நஷ்டத்தில் இயங்கும் அதிவேக நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் , அனைத்து அதிவேக வீதிகளிலும் QR குறியீட்டைப் பயன்படுத்தி கட்டங்களை அறவிடுவதற்கான நடைமுறைகளை ஆரம்பிக்குமாறும் இதன் போது குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.