கொள்ளுப்பிட்டியில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது!

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் இயங்கி வந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவின் அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த இடத்தில் இருந்து 11 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், மருத்துவ அறிக்கைகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள், வங்கி ரசீதுகள் மற்றும் பிற ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (30) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

வெளிநாட்டு வேலைகளைப் பெறுவதற்கு எந்தவொரு நிறுவனத்திற்கோ அல்லது நபருக்கோ பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்னர், பணியகத்தின் இணையதளமான www.slbfe.lk க்குச் சென்று, வெளிநாட்டு வேலைகளுக்கு பணியமர்த்துவதற்கு அந்த நிறுவனத்திற்கு சரியான உரிமம் உள்ளதா மற்றும் அந்த நிறுவனம் தொடர்புடைய வேலையைப் பெற்றுள்ளதா என்பதைக் கண்டறியவும். 

அல்லது 1989 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் தகவல்களைப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.