வைத்தியசாலையின் மதில் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

கடுகன்னாவ பிரதேச வைத்தியசாலையின் பழைய மதில் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் துரதிஷ்டவசமாக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கடுகன்னாவ, பரணபட்டிய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ரஞ்சித் அபேரத்ன என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பழைய மதிலை அகற்றிவிட்டு புதிய மதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12 மணி அளவில் பழைய சுவர் இடிந்து வீழ்ந்த நிலையில் சுவருடன் இடிந்து விழுந்த மண்மேட்டின் கீழ் குறித்த நபர் புதையுண்டுள்ளார்.

எவ்வாறாயினும், அங்கிருந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலை ஊழியர்களின் உதவியுடன் மண்மேட்டின் கீழ் புதையுண்ட நபரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்த போதிலும், அது பயனளிக்கவில்லை.