மக்களுக்கு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை!

அன்பளிப்பு அல்லது கடன் வழங்குவதாக கூறி பண மோசடிகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மக்களை எச்சரித்துள்ளனர்.

அத்திமலே மற்றும் சியம்பலாண்டுவ பிரதேசங்களில் இவ்வாறான மோசடியில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பணம் வசூலிக்கும் நடவடிக்கை

அத்துடன் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பிரதிநிதிகளாக காட்டிக் கொண்டு, பிரதேசவாசிகளுக்கு சுயதொழில் செய்வதற்கு நிதியுதவி வழங்குவதற்காகவும், சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்காகவும் அந்த அமைப்பின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்காக தலா 600 ரூபா பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு வசூலிக்கப்பட்ட 26,000 ரூபா பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதில், சந்தேகநபர் கடந்த 4ஆம் திகதி 136,000 ரூபாவை பெற்று கூட்டுறவு வங்கியில் பணத்தை வைப்பிலிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர். இதேவேளை, நேற்று (05.11.2023) சியம்பலாண்டுவ பிரதேசத்தில் பணம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பணம் பறிமுதல்

இவர்களிடம் இருந்து 70,300 ரூபா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடையவர் எனவும், சந்தேகநபர் 32 வயதான சியம்பலாண்டுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த 2 சந்தேகநபர்களும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இவ்வாறான மோசடிகளை செய்துள்ளார்களா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த மோசடி நபர்களிடம் சிக்க வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.