கடலுக்கு சென்ற இரு மீனவர்கள் மாயம்!

மட்டக்களப்பு – கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கல்மடு கடல் பிரதேசத்தில் பைவர் இயந்திர படகில் மீன்பிடிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்கு சென்ற இருவர் 3 தினங்களாகியும் வீடு திரும்பாது இயந்திர படகுடன் காணாமல் போயுள்ளதாகவும் இவர்களை கடற்படையினர் தேடிவருவதாக நேற்று (10) கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

கல்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய தங்கவேல் தங்கத்துரை, 56 வயதுடைய கந்தையா புண்ணியராசா ஆகிய இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கல்குமடு கடற்கரையில் இருந்து பைவர் இயந்திரப் படகில் கடலில் மீன்பிடிப்பதற்காக சென்றவர்கள் வீடு திரும்பாத நிலையில் அவர்கள் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து கல்குடா பொலிஸார் கடற்படையின் உதவியுடன் இயந்திர படகுடன் காணாமல் போன இருவரையம் தேடிவருவதாகவும் காணாமல்போய் நேற்றுடன் மூன்று தினங்களாகியும் அவர்கள் தொடர்பாக எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை எனவும் தொடர்ந்து கடற்படை மற்றும் மீனவர்களின் உதவியுடன் தேடிவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.