நீர் கொழும்பு கடற்பரப்பில் மீட்க்கப்பட்ட பீடி இலைகள்!

நீர்கொழும்பு கடற்பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1,143 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் நேற்று (17) கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், சந்தேகத்தின் பெயரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய இரண்டு இயந்திர படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 33 மற்றும் 53 வயதுக்கு உட்பட்ட நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான களனி கெமுனு மற்றும் ரங்கலா ஆகிய இலங்கை கடற்படை கப்பல்கள் ஒன்றாக இணைந்து மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான இரண்டு இயந்திரப் படகுகள் கரையை நோக்கி பயணிப்பதை அவதானித்த கடற்படையினர் அந்த இரண்டு இயந்திர படகுகளையும் நிறுத்தி சோதனை செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, குறித்த இரண்டு இயந்திர படகுகளிலும் 35 உர மூடைகள் காணப்பட்டுள்ளதுடன், அதனை கடற்படையினர் சோதனையிட்டுள்ளனர்.

குறித்த 35 உர மூடைகளிலும் 1,143 கிலோ கிராம் பீடி இலைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 1,143 கிலோ கிராம் பீடி இலைகள், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும், இரண்டு இயந்திர படகுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.