வரி அதிகரிப்பை தொடர்ந்து பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகின்றதா?

அரசாங்கம் VAT வரியை அதிகரித்த போதிலும் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

மேலும் நாளை முதல் 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள VAT வரி அதிகரிப்பினால் பேக்கரி தொழில்துறையினரும், பேக்கரி உரிமையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் நாட்டு மக்களை நினைத்து பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டதுடன், அதிகரிப்பினால் ஏற்படும் பாரிய நட்டத்தை பேக்கரி உரிமையாளர்களே சுமக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக VAT வரி அதிகரிப்பினால் பேக்கரி தொழில் மற்றும் பேக்கரி உரிமையாளர்களுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடி தீர்வு எட்டப்படும் என அவர் தெரிவித்தார்.