இனவாதத்தை தூண்ட இடமளிக்கக்கூடாது!

இந்த புதிய வருடத்தில் தேர்தலை இலக்காக கொண்டு இனவாதத்தை தூண்டுவதற்கு முயற்சிக்கும் சுயநல அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க கூடாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சு வளாகத்தில் நேற்று (01.01.2024) இடம்பெற்ற கடமை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையின் ஜன நாயக சமூகத்தில் தேசிய ஒருமைப்பாட்டினையும் சட்டத்தின் ஆட்சியையும் ஏற்படுத்தி நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.

தேர்தல் வருடம்
அத்துடன், உலகில் பொருளாதார வீழ்ச்சியடைந்த நாடுகளில் இவ்வளவு குறுகிய காலத்தில் ஸ்த்திர நிலையை அடைந்த நாடு இலங்கை மட்டுமே ஆகும்.

வீழ்ச்சியடைந்துள்ள எமது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.

தொடர்ந்து, அரசியலமைப்பில் ஊழல் எதிர்ப்பு போன்ற, மக்கள் எதிர்பார்த்த மாற்றங்களையும் மேற்கொள்ளவுள்ளோம். மேலும், இந்த வருடம் தேர்தல் வருடம் ஆகும்.

தேர்தலை நோக்காக கொண்டு இன, மத வேறுபாடுகளை உருவாக்க முயற்சிக்கும் சுயநல அரசியல்வாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என தெரிவித்தார்.