நரேந்திர மோடியை விமர்சனம் செய்த அமைச்சர்கள் பணி இடைநீக்கம்!

  இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்த மாலைதீவைச் சேர்ந்த அமைச்சர்கள் மூவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்டSNORE KILLING எனப்படும் ஆழ்கடல் நீச்சலுக்கான உடையில் இருந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

அமைச்சர்கள் மூவரையும் இடைநீக்கம்

பிரதமர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு மாலைதீவுக்குப் பதிலாக லட்சத்தீவைப் பரிந்துரைக்கும் விதத்திலும் அமைந்தன. இதையடுத்து மாலைதீவு அமைச்சர்களான மரியம் ஷியுனா, மல்ஷா மற்றும் ஹசன் ஜிஹான் ஆகியோர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

அமைச்சர்களின் கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்,மாலைதீவு அரசாங்கம் குறித்த அமைச்சர்கள் மூவரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தது. அதோடு அது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில்,

வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் உயர்மட்ட நபர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தரக்குறைவான கருத்துக்கள் பதிவேற்றப்பட்டு இருப்பது அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இந்த கருத்துகள் தனிப்பட்டவை. அவை மாலைதீவு அரசாங்கத்தின் கருத்துகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை. இதுபோன்ற தரக்குறைவான கருத்துகளை கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மாலைதீவு அமைச்சர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தமது பயணத்தை இரத்து செய்துள்ளனர்.

அத்துடன் Boycott maldives என்ற ஹேஷ்டேக்கும் இணையங்களில் தற்போது டிரென்டாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.