மாணவர்கள் தொடர்பில் இடம்பெறும் மோசடி தொடர்பில் கல்வி அமைச்சர் எச்சரிக்கை!

நாட்டில் மேலதிக வகுப்புகளுக்கு மாணவர்களை அதிகளவில் இணைத்துக்கொள்ளும் நோக்கில் பரீட்சை வினாத்தாள்களை ஆசிரியர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றார்களா என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

இவ் வருட உயர் தரப் பரீட்சையின் விவசாய பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டமை தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

முன்னரும் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இருப்பினும், தற்போதுள்ள போட்டிகளின் அடிப்படையில் சில ஆசிரியர்கள் இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இது பாரதூரமான விடயமாகும் என்பதால் பரீட்சைகள் திணைக்களம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வருட உயர் தரப் பரீட்சையின் விவசாய பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட சம்பவம் தொடர்பில், இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.