மக்களின் வரிச்சுமை மேலும் அதிகரிக்கும் அபாயம்!

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் புதிதாக சொத்து வரி அறவீடு செய்யப்பட உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை விவகாரங்களுக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் புரூவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டில் வரிச்சுமை மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாட்டின் அடிப்படையில் இவ்வாறு வரி அறவீடு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரியின் ஊடாக சொத்து உரிமையாளர்கள் மீது வரி அறவீடு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வரி வருமானம் உயர்வு
கடந்த 2022 ஆம் ஆண்டில் நாட்டின் வரி வருமானம் 7 சதவீதமாக காணப்பட்டதாகவும், இது 2023 ஆம் ஆண்டில் 9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தியில் 12 சதவீதமாக வரி வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் வரி வருமானத்தை மொத்த தேசிய உற்பத்தியில் 14 வீதமாக அதிகரித்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக புவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.